மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப் படிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சுமார் 95 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இசையில் பி.ஏ. (B.A. Music) பட்டப்படிப்புக்கான விண்ணப்ப வயது வரம்பு தற்போது 40 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்தத் துறையில் டாக்டர் சாந்தி மகேஷ் மற்றும் டாக்டர் ஸ்ரீ கற்பகம் ஞானப்பிரகாசம் ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இசையில் எம்.ஏ. மற்றும் முனைவர் பட்ட (Ph.D.) படிப்புகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்லூரியின் மற்றொரு தனிச்சிறப்பு வாய்ந்த படிப்பாக பி.ஏ. சமஸ்கிருதம் விளங்குகிறது. இந்தப் படிப்பில் பட்டம் பெறும் மாணவிகள், மேல்படிப்புகளைத் தொடர்ந்து விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்களாக உயர்ந்து வருகின்றனர்.
அதேபோல், பி.ஏ. தெலுங்கு படிப்பும் அரிதாக வழங்கப்படும் ஒரு பட்டப்படிப்பாகும். இதில் சேருவதற்கு தெலுங்கு மொழியில் அடிப்படை அறிவு அவசியம்.
மேற்கண்ட அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டிருப்பதன் நோக்கம், புதிய மற்றும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மாணவிகளை உயர்கல்வியில் சேர ஊக்குவிப்பதாகும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: www.tngasa.in
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 29
செய்தி: வரலட்சுமி ஆனந்த்குமார்




