குப்பம் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நடத்திய சர்வேயின்படி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை.

மயிலாப்பூர் டைம்ஸ் சார்பாக சாந்தோம் மற்றும் பட்டினப்பாக்கம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பற்றி மக்களிடையே சிறிய சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே சுமார் முப்பத்திரண்டு நபர்களிடம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்களில் ஆறு நபர்கள் ஆண்கள் மீதிபேர் பெண்கள். இந்த சர்வேயின் படி மக்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதற்கு அவர்கள் பின்வரும் காரணங்களை பட்டியலிடுகின்றனர்.

* நோயினால் நான் பாதிக்கப்படவில்லை அதனால் எனக்கு தடுப்பூசி தேவையில்லை.
* ஏற்கனெவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டேன் அதனால் எனக்கு தேவையில்லை. மீண்டும் கொரோனா வந்தால் மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொள்வேன்.
* இந்த பகுதியில் வீசும் கடல் காற்று என்னுடைய உடலுக்கு ஏற்றவாறு உள்ளது. நான் ஆரோக்கியமாக உள்ளேன்.
* இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் எனக்கு உள்ளது.

மேலும் இங்கு வசிக்கும் மக்கள் பொதுவாக சில கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனெவே தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. அதனால் எனக்கு இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்ள விருப்பமில்லை. மேலும் இங்கு வசிக்கும் மக்களுக்கு எங்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது என்பது பற்றிய தகவல் கூட சரிவர தெரியவில்லை. சிலர் ஆர்.ஏ. புரம், மந்தைவெளி பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் வசிக்கும் இருப்பிடம் அருகே உள்ள அப்பு தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் பற்றி தெரியவில்லை. எனவே சென்னை மாநகராட்சி இது போன்ற பகுதிகளில் மக்களிடையே கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் தகவலை தெரிவிக்க மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியத்தையும் தெரியப்படுத்த வேண்டும்.

Verified by ExactMetrics