தேர்தல் 2021: மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்ததா?

நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தது. சாந்தோம் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குப்பம் பகுதியில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையேயான அடிதடிகள் வாக்குச்சாவடி வரை வந்தது. மேலும் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட கையுறைகளை வாக்காளர்கள் ஆங்காங்கே வீசி சென்றனர்.

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கோவிட் நோயினால் பாதிக்கப்படுவார்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பணியாற்ற வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்களிக்க வரும் செய்தி கேட்டு பத்திரிக்கை புகைப்படகலைஞர்கள் குழுமி இருந்தனர். அவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாக்களித்து சென்றார். இதுபோல் மேலும் சில வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் வாக்களித்தனர். கடைசியாக ஏழுமணிக்கு பின் தேர்தல் அலுவலர்கள் ஈவிஎம் இயந்திரங்களை மூடி முத்திரையிட்டு லாரியில் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

Verified by ExactMetrics