தேர்தல் ஆணையத்தால் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டு போடும் திட்டம் தோல்வி.

எண்பது வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இந்த முறை முதல் முறையாக தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த செய்தி மற்றும் இதற்கான வழிமுறைகள் சரிவர மக்களுக்கு சென்று சேரவில்லை. இதனால் இந்த திட்டம் தோல்வியடைந்தது. மூத்த குடிமக்கள் சிலர் தபால் ஓட்டின் விண்ணப்பம் தபாலில் வரும் என்றும் விண்ணப்பத்தை தபாலிலேயே அனுப்பலாம் என்றும் நினைத்திருந்தனர். சிலர் மின்னஞ்சல் மூலமாக தபால் ஒட்டு போடவேண்டும் என்று நினைத்திருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையமோ ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள எண்பது வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு சென்று தபால் ஓட்டின் 12D விண்ணப்பத்தை வழங்கினர்.

ஆனால் சில மூத்த குடிமக்கள் ஊழியர்கள் தங்களின் அடையாள அட்டையை எடுத்துவராததால் கொரோனா காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. 12D விண்ணப்பத்தை சமர்பித்தவர்கள் மட்டுமே தபால் ஓட்டு போடா முடியும். ஆனால் அவ்வாறு 12D விண்ணப்பத்தை சமர்பித்தவர்களின் வீடுகளுக்கு பின்னர் ஊழியர்கள் வாக்கு பெட்டியை எடுத்துவந்து தபால் ஓட்டை சேகரிக்கவில்லை என்றும் ஒரு சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் மூத்த குடிமக்கள், நாளை மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் நாளை வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதா வேண்டாமா என்ற மனநிலையில் உள்ளனர். இந்த கருத்துக்களையும் குற்றச்சாட்டுகளையும் ஆர்.கே நகர் பகுதியில் உள்ள மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

Verified by ExactMetrics