மயிலாப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழக அரசின் ஆணைப்படி நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்திருந்தனர். பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வராத மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் உள்ள மேசைகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. அந்த மேசைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இது போன்று சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு பள்ளி மாணவிகளின் பேண்டு இசை நிகழ்சியுடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர். மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூச்செண்டு வழங்கினர்.

மயிலாப்பூர் ஆர்.கே. மட சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்பிணர்வு இருப்பதாக தலைமை ஆசிரியர் கலா தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறையில் முகக்கவசம் அணிந்து பாடம் எடுக்க சிரமம் ஏற்பட்டால், திறந்த வெளியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Verified by ExactMetrics