தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் வன்னியம்பதி பகுதியில் புதிய கட்டிடப்பணிகளை விரைவில் தொடங்க உள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள வன்னியம்பதி பகுதி ஒரு பெரிய பகுதி. இங்கு சுமார் நாற்பது/ஐம்பது வருடங்களுக்கு முன்னால் குடிசையில் வசித்து வந்த மக்களுக்கு பதின்மூன்று பிளாக் வீடுகள் அரசால் கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த வீடுகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அரசாங்கம் இந்த பழைய கட்டிடங்களை இடித்து விட்டு புதிய கட்டிடங்களை கட்டி திரும்ப ஒப்படைப்பதற்க்காக இங்கு வசித்து வந்த மக்களை காலி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். எனவே அரசின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த இரண்டு மாதங்களாக இங்கு வசித்து வந்த மக்கள் வீடுகளை காலி செய்து வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி இங்கு சுமார் இருபத்தைந்து குடும்பங்களே வசித்து வருகின்றனர். இவர்களும் வருகின்ற டிசம்பர் 10ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய உள்ளனர். மொத்தமாக இங்கு சுமார் முந்நூறு குடும்பங்கள் வசித்து வந்தனர், இது தவிர இந்த பகுதியில் சிலர் ஆக்கிரமிப்பின் மூலம் வீடுகளும் கடைகளும் வைத்திருந்தனர் அவர்களும் காலி செய்து விட்டனர்.

இங்கு வசித்து வந்த மக்கள் தங்களுடைய தொழில், வேலை, குழந்தைகளின் படிப்பு காரணமாக மயிலாப்பூர் பகுதியிலேயே வாடகைக்கு வீடுகளை பார்க்க வேண்டி உள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மந்தைவெளிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வீட்டு வாடகை அதிகமாக உள்ளதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர். எனவே அரசாங்கம், விரைந்து இந்த பணிகளை முடித்து வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், மீதி உள்ள இருபத்தைந்து குடும்பங்கள் வரும் 10ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்த பிறகு, இங்கு தங்களுடைய பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Verified by ExactMetrics