மந்தைவெளிபாக்கத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்ட இன்பினிட்டி பூங்கா தற்போது மீண்டும் திறப்பு

சாந்தோம் அம்மா உணவகம் அருகே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது இன்பினிட்டி பூங்கா. இந்த பூங்காவில் பன்னிரெண்டு வயது வரை உள்ள குழந்தைகளே அனுமதிக்கப்படுவர். இந்த பூங்காவின் சிறப்பு என்னவென்றால் இங்குள்ள விளையாட்டு திடல்கள் மற்றும் மற்ற விளையாட்டு பொருட்கள் அனைத்தும் முழுக்க முழுக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பூங்காவிற்கு மயிலாப்பூர் பகுதி குழந்தைகள் தவிர மந்தைவெளி, அடையார் மற்றும் ராயப்பேட்டை பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் வருகின்றனர். இந்த பூங்காவை அப்பாசாமி பில்டர்ஸ் நிர்வகித்து வருகின்றனர். இந்த பூங்காவை பராமரிக்கவும் மற்றும் பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்டோர் பூங்காவில் நுழையாமல் தடுக்கவும் தன்னார்வலர்கள் தேவைப்படுகிறார்கள். மந்தைவெளிபாக்கம் பகுதியில் வசிப்பவர்கள் தன்னார்வலர்களாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் பூங்கா காவலரை அணுகலாம். இந்த பூங்கா சாந்தோம் அம்மா உணவகம் பின்புறத்தில் உள்ளது.

இதுபோன்ற பூங்கா விரைவில் கோட்டூர்புரத்திலும் மற்றும் நொளம்பூர் பகுதியிலும் திறக்கப்படவுள்ளது.

Verified by ExactMetrics